ஆலங்குளத்தில் செவ்வாய்க்கிழமை மாலை சூறைக்காற்று மற்றும் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ததில், ஏராளமான மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன.
ஆலங்குளத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் பலத்த சூறைக்காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. இம்மழை சுமார் ஒரு மணி நேரம் நீடித்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் சூறைக் காற்றில் 50-க்கும் மேற்பட்ட மரங்கள் மின்கம்பிகள் மீது முறிந்து விழுந்தன. வீடுகள், கடைகளில் போடப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட ஆஸ்பெஸ்டாஸ் தகடுகள், கடைகள், கடைவீதிகளில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகள் காற்றில் பறந்தன.
ஆலங்குளம் ஜோதிநகர் பகுதியில் 7 மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதனால் ஆலங்குளம் முழுவதும் மின் தடை ஏற்பட்டது.
இதையடுத்து மின்வாரிய இளநிலை பொறியாளர் கண்ணன் தலைமையிலான மின்வாரிய ஊழியர்கள் அறுந்த மின்கம்பிகள், சாய்ந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கானார்பட்டி துணை மின்நிலையத்திலிருந்து வரும் மின்சாரம் தடைபட்டதால், தற்காலிகமாக கொடிக்குறிச்சியிலிருந்து மின்சாரம் பெறப்பட்டு ஆலங்குளத்தின் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் விநியோகிக்கப்பட்டது.
ஜோதி நகர் பகுதிக்கு மட்டும், முறிந்த மின்கம்பங்கள் சீரமைக்கப்பட்டு புதன்கிழமை மின்சாரம் வழங்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.