மார்த்தாண்டம் அருகேயுள்ள திக்குறிச்சி மகாதேவர் கோயில் தீர்த்தப் படித்துறையில், தாமிரவருணி நதிக்கு மகா ஆரத்தி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க 12 சிவாலயங்களில் 2 ஆவது கோயிலாக அமைந்துள்ளது திக்குறிச்சி மகாதேவர் கோயில். இக் கோயிலில் கடந்த அக்டோபர் மாதம் மகா புஷ்கர விழா நடைபெற்றது.
இவ் விழாவில் கோயில் அருகே அமைந்துள்ள தாமிரவருணி நதிக்கு சிறப்பு பூஜைகள் செய்து, மகா ஆரத்தி காட்டப்பட்டது.
இதைத் தொடர்ந்து மாதந்தோறும் பெளர்ணமி நாளில் இங்குள்ள தாமிரவருணி நதிக்கு பக்தர்கள் ஆரத்தி காட்டி வருகிறார்கள். தொடர்ந்து கோயில் தலைமை அர்ச்சகர் தலைமையில் பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை தாமிரவருணி நதிக்கு மகா ஆரத்தி காட்டி வழிபட்டதுடன், மகாதேவர் சன்னதிக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.