மக்களவைத் தேர்தலில், கன்னியாகுமரி தொகுதியில் பாஜகவும், காங்கிரஸும் நேரடியாக மோதுகின்றன.
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. இந்தக் கூட்டணியில் கன்னியாகுமரி தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை இத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மத்திய இணை அமைச்சராக உள்ள பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டியிடுவார் என்று தெரிகிறது.
இதே போல் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக யார் போட்டியிடுவார் என்பதில் அந்த கட்சியினரிடையே கடும் போட்டி நிலவுகிறது. விரைவில் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளார். இதன் மூலம் கன்னியாகுமரி தொகுதியில் தேசிய கட்சிகளான காங்கிரஸ் - பாஜக இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது.
இதே போல் கன்னியாகுமரி தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் களத்தில் இறங்க உள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் இருந்து பாஜகவின் சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் மட்டுமே வெற்றி பெற்று மத்திய அமைச்சர் ஆனார். இத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வசந்தகுமார் 2 ஆவது இடத்தையும், அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜான்தங்கம் 3 ஆவது இடத்தையும் பெற்றனர்.
இதே போல் சிவகங்கை தொகுதியிலும் பாஜக - காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கன்னியாகுமரி, சிவகங்கை ஆகிய 2 தொகுதிகளில்தான் காங்கிரஸ் - பாஜக நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது.