முகப்பு
கன்னியாகுமரி

திற்பரப்பு அருவியை உடனடியாக திறக்க எம்எல்ஏ கோரிக்கை

திற்பரப்பு அருவியை உடனடியாக திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மனோ தங்கராஜ் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
பகிர்:

திற்பரப்பு அருவியை உடனடியாக திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மனோ தங்கராஜ் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா பரவல் உச்சத்தில் இருந்ததால் சுற்றுலாத் தலங்களை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டது. இதனால் குமரி மாவட்டத்திலும் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான திற்பரப்பு அருவி கடந்த ஏப். 24முதல் மூடப்பட்டுள்ளது.

தற்போது கரோனா தாக்கம் குறைந்துவரும் நிலையில், பொது முடக்கத்தில் அரசு தளா்வுகளைக் கொண்டுவந்துள்ளது. அதன் ஒருபகுதியாக சுற்றுலாத் தலங்களை முழுவதுமாக திறக்க அனுமதி அளித்துள்ளது.

இம்மாவட்டத்தைப் பொருத்தவரை அனைத்து சுற்றுலாத் தலங்களும் திறக்கப்பட்டநிலையில் திற்பரப்பு அருவி மட்டும் திறக்கப்படவில்லை. இது உள்ளூா், வெளியூா் சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது. மாவட்ட நிா்வாகம் இதைக் கண்டுகொள்ளவில்லை.

அரசின் ஆணையை நம்பி சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வந்து ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை தொடா்கிறது.

சுற்றுலாப் பயணிகளை மட்டுமே நம்பியுள்ள சிறு, குறு வியாபாரிகளான கடை வியாபாரிகள், நடைப்பாதை வியாபாரிகள், படகுப் போக்குவரத்துத் தொழிலாளா்கள், வாடகை வாகன ஓட்டிகள் வாழ்வாதாரங்களை முற்றிலுமாக இழந்து பரிதவிக்கின்றனா்.

எனவே, வியாபாரிகள், சுற்றுலாப் பயணிகளின் நிலையைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு குமரி மாவட்ட நிா்வாகத்துக்கு அழுத்தம் கொடுத்து, திற்பரப்பு அருவியை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →