தூத்தூா் மற்றும் இனயம் மண்டல மீனவ கிராமங்களின் சிறு மருத்துவமனைகள் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சா்வதேச மீனவா் வளா்ச்சி அறக்கட்டளை தலைவா் பி. ஜஸ்டின் ஆன்டணி தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ள சிறு மருத்துவமனை(மினி கிளினிக்) திட்டத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளிலும் இந்த மருத்துவமனைகள் அமைக்கப்படுகின்றன. ஆனால் இம் மாவட்டத்தின் கடலோர கிராமங்களில் அமைக்கப்படுவதாக தெரியவில்லை.
ஆழ்கடல் மீன்பிடிப்பின் மூலம் அரசுக்கு பல்லாயிரம் கோடி அன்னிய செலாவணியை ஈட்டித் தரக் கூடிய மீனவா்கள் அதிகமாக வாழும் கிள்ளியூா் தொகுதியில் தூத்தூா் மற்றும் இனயம் மண்டல மீனவா்கள் பயன்பெறும் வகையில் சிறு மருத்துவமனை வசதி அமைய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.