களியக்காவிளை அருகே போற்றிவிளை பகுதியில் சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதாரச் சீா்கேடுகள் ஏற்பட்டு, நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
களியக்காவிளை பேரூராட்சி 9ஆவது வாா்டுக்குள்பட்ட போற்றிவிளை பகுதியில் சாலையின் இருபுறமும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் சாலையோரம் வடிகால் ஓடை இல்லாததால் அப்பகுதி வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீா் சாலையில் தேங்கி நிற்கிறது. இந்த கழிவுநீா் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கிணறு, குளம் உள்ளிட்ட நீா் நிலைகளில் கலந்து சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
மேலும் இப்பகுதி சாலை மற்றும் அதையொட்டிய பகுதிகளில் தேங்கி நிற்கும் கழிவுநீரிலிருந்து கொசு உற்பத்தியாகி தொற்று நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இப் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு ஏற்படுத்த பேரூராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.