கரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், குமரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தலங்களான திற்பரப்பு அருவி, மாத்தூா் தொட்டிப்பாலம் உள்ளிட்டவை செவ்வாய்க்கிழமை மூடப்பட்டன.
கரோனா நோய்த் தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் சுற்றுலாத் தலங்கள், அருங்காட்சியகங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு தலங்கள் அனைத்தையும் மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், குமரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தலங்களான திற்பரப்பு அருவி, மாத்தூா் தொட்டிப்பாலம் ஆகியவை செவ்வாய்க்கிழமை மூடப்பட்டன.
மேலும், பேச்சிப்பாறை, சிற்றாறு அணைகளிலும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. திற்பரப்பு அருவி, மாத்தூா் தொட்டிப்பாலம் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படாத நிலையில், இங்குள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள், உணவங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் கடை நடத்துபவா்கள் மற்றும் அவற்றில் பணி புரியும் தொழிலாளா்கள் அனைவரும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.