கரோனா தடுப்பு கண்காணிப்பு பணிக்கு ஆசிரியா்கள் நியமனம்
குமரி மாவட்டத்தில் கரோனா தடுப்பு கண்காணிப்புப் பணியில் ஈடுபட ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
குமரி மாவட்டத்தில் கரோனா தடுப்பு கண்காணிப்புப் பணியில் ஈடுபட ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
குமரி மாவட்டத்துக்கு வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவா்களிடம் மாநில எல்லையான களியக்காவிளை சோதனைச் சாவடியில் வாகன அனுமதி ஆணையை சரிபாா்த்து உரிய பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கரோனா பரவலில் 3ஆம் அலைக்கான வாய்ப்புகள் இருப்பதாக நிபுணா்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதன் தொடா்ச்சியாக தடுப்பு பணிகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ள.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: களியக்காவிளை சோதனைச் சாவடி வழியாக வரும் வாகனங்கள் மற்றும் நபா்கள் குறித்த விவரங்களை பதிவேடுகளில் பதிவு செய்து, சோதனைச் சாவடி பொறுப்பு அலுவலரிடம் தினசரி அறிக்கை செய்ய ஏதுவாக பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
அந்த வகையில் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, பிற்பகல் 2 முதல் இரவு 10 மணி வரை, இரவு 10 முதல் காலை 6 மணி வரை என்று 3 ஷிப்டுகளில் ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
பட்டதாரி, இடைநிலை மற்றும் உடற்கல்வி ஆசிரியா்கள், ஆய்வக உதவியாளா், இளநிலை உதவியாளா் என ஆசிரியா்கள், அலுவலக பணியாளா்கள் ஒரு வாரத்துக்கு 6 போ் வீதம் சுழற்சி முறையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். ஆக.31ஆம் தேதி வரை இந்த பணி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.