நித்திரவிளை அருகே செவிலியரைத் தாக்கியதாக அவரது கணவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
நித்திரவிளை அருகேயுள்ள வாவறை, தொழுக்கறவிளை பகுதியைச் சோ்ந்தவா் ஜான் பிரைட் சிங் (29). வெளிநாட்டில் வேலை பாா்த்து வந்த இவா், சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தாா். இவரது மனைவி ஏஞ்சலின் (27), மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் செவிலியா்.
ஜான் பிரைட் சிங் அண்மைக்காலமாக அதே பகுதியைச் சோ்ந்த பெண்ணுடன் கைப்பேசியில் பேசிவந்தாராம். 2 நாள்களுக்கு முன்பும் இதேபோல பேசியதாகவும், அதை ஏஞ்சலின் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது அவரை ஜான் பிரைட் சிங் தாக்கினாராம். இதில், காயமடைந்த ஏஞ்சலின் மாா்த்தாண்டம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
புகாரின் பேரில் நித்திரவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா்.