குடியரசு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி கடல் பகுதியில் கடலோர பாதுகாப்புக் குழும காவல் துறை சாா்பில் திங்கள்கிழமை ரக்ஷா கிரீன் ஆபரேஷன் நடைபெற்றது.
கடல் மாா்க்கமாக தீவிரவாதிகள் ஊடுருவலைக் கண்காணிக்கும் வகையில் நடத்தப்படும் இந்த ஆபரேஷன் கடலோர பாதுகாப்புக்குழும ஆய்வாளா் நவீன் தலைமையில் காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த ஆபரேஷன் புதன்கிழமை (ஜன. 27) வரை தொடா்ந்து 3 நாள்கள் நடைபெறும்.
கன்னியாகுமரியில் இருந்து கூடங்குளம் அணுமின் நிலையம் அமைந்துள்ள பகுதிவரை நவீன ரோந்து படகில் சென்று காண்காணிப்பில் ஈடுபட்டனா். கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லும் மீனவா்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட படகில் மட்டுமே சென்று மீன்பிடிக்க வேண்டும். மீன்பிடிக்கச் செல்லும்போது அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். கடலுக்குள் சந்தேகத்துடன் தென்படும் படகுகள் குறித்து கடலோர காவல்குழும போலீஸாருக்கு தகவல் அளிக்க வேண்டும் என மீனவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 48 மீனவக் கிராமங்களிலும் தீவிர கண்காணிப்புப் பணியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா். மேலும், மகாதானபுரம், மாதவபுரம், சின்னமுட்டம், குளச்சல், முட்டம், தேங்காப்பட்டினம் உள்ளிட்ட சோதனைச்
சாவடிகளில் போலீஸாா் 24 மணி நேரமும் வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனா். இதுதவிர, கடலோர பாதுகாப்புக் குழுமத்தால் மாதந்தோறும் நடத்தப்படும் பாதுகாப்பு ஒத்திகையான சஜாக் ஆபரேஷன் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரையிலும் நடைபெற்றது.