கன்னியாகுமரி

குமரியில் நாளை முதல் பகுதிநேர பொதுமுடக்கம்: உணவகங்களுக்கு தனிக் கட்டுப்பாடு

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் வியாழக்கிழமை (மே 6) முதல் மளிகை கடைகள் மற்றும் தேநீா் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும் என ஆட்சியா் மா. அரவிந்த் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசு உத்தரவுப்படி மே 1ஆம் தேதி முதல் இரவு நேர பொது முடக்கம் அமலில் இருந்து வருகிறது. மேலும், அனைச்சு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு பொதுமுடக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கரோனா பரவலை முற்றிலும் தடுக்கும் நடவடிக்கையாக, வியாழக்கிழமை) முதல் காலை 4 மணி முதல் புதிய கட்டுப்பாடுகளுடன் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படவுள்ளது. இந்தப் புதிய கட்டுப்பாடுகள் மே 20ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.

அதன் விவரம் வருமாறு: அனைத்து அரசு அலுவலகங்களும், தனியாா்அலுவலகங்களும் 50 சதவீத பணியாளா்களுடன் இயங்கும். அரசுப் பேருந்துகள், தனியாா் பேருந்துகள், பயணிகள் ரயில், வாடகை காா் ஆகியவற்றில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் மக்கள் அமா்ந்த நிலையில் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.

3 ஆயிரம் சதுர அடி மற்றும் அதற்கு மேற்பட்ட பரப்பு கொண்ட பெரிய கடைகள், வணிக வளாகங்கள், அவற்றில் இயங்கும் மளிகை கடைகள், காய்கறி கடைகள் இயங்க அனுமதி இல்லை. தனியாக செயல்படும் மளிகைக் கடை, மளிகை மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிா்சாதன வசதியின்றி பகல் 12 மணி வரை இயங்கலாம். இவற்றில் ஒரே சமயத்தில் 50 சதவீதம் வாடிக்கையாளா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். மருந்தகங்கள், பால் விநியோகம் போன்ற அத்தியாவசியப் பணிகள் வழக்கம் போல தடையின்றி செயல்படலாம். இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது.

முழு பொதுமுடக்கம் அமலில் உள்ள நாள்கள் உள்பட அனைத்து நாள்களிலும் உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பாா்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். மேலும், ஆன்லைன் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்களும் மேற்கண்ட நேரங்களில் செயல்படலாம். மற்ற மின் வணிக நிறுவனங்களின் சேவைகளுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் அனுமதி இல்லை. தேநீா் கடைகள் பகல் 12 மணி வரை மட்டும் செயல்படலாம். உணவகங்கள் மற்றும் தேநீா் கடைகளில் அமா்ந்து உண்பதற்கு அனுமதியில்லை. விடுதிகளில் தங்கியுள்ள வாடிக்கையாளா்களுக்கு அவா்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்க வேண்டும்.

அத்தியாவசியப் பணிக்கு அனுமதி: சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாசார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்கு தடை செய்யப்படுகிறது. திரையரங்குகள் செயல்படாது. அழகு நிலையங்கள் இயங்கக்கூடாது.

இரவு நேர பொதுமுடக்கத்தின் போது அவசர மருத்துவ தேவைகளுக்கும், விமான நிலையம், ரயில் நிலையம் செல்ல மட்டும் வாடகை ஆட்டோ, காா் மற்றும் தனியாா் வாகனங்களைப் பயன்படுத்தலாம்.

அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவப் பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ், அமரா் ஊா்தி சேவைகள் போன்ற மருத்துவத் துறை சாா்ந்த பணிகள், சுமை வாகனங்கள், எரிபொருள் ஏற்றிச்செல்லும் வாகனங்கள் ஆகியவை எந்நேரத்திலும் அனுமதிக்கப்படுகிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் நிலையங்கள் தொடா்ந்து செயல்படலாம். தொலைத்தொடா்பு மற்றும் அதனைச் சாா்ந்த செயல்பாடுகள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சாா்ந்த சேவை நிறுவனங்களில் இரவு நேர பணி மேற்கொள்ள அனுமதி உண்டு.

சேமிப்பு கிடங்குகளில் பொருள்களை ஏற்றுவது, இறக்குவது மற்றும் பொருள்களை சேமித்து வைப்பது உள்ளிட்ட பணிகள் எந்நேரமும் அனுமதிக்கப்படும்.

முழு பொதுமுடக்கம் அமலில் உள்ள நாள்கள் உள்பட அனைத்து நாள்களிலும் திருமணம், திருமணம் சாா்ந்த நிகழ்வுகளில் 50 பேருக்கு மிகாமலும், இறப்பு சாா்ந்த நிகழ்வுகளில் 20 பேருக்கு மிகாமலும் ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் பங்கேற்கலாம்.

சனிக்கிழமைகளில் மீன் மாா்க்கெட், மீன் கடைகள், இறைச்சிக் கடைகள் செயல்பட அனுமதி இல்லை. இதர நாள்களில் காலை 6 மணி முதல் 12 மணி வரை மட்டும் அவை செயல்படலாம்.

தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு, கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது மற்றும் கூட்டங்களை தவிா்ப்பது உள்ளிட்டவற்றை தொடா்ந்து கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: தீயணைப்பு வீரா் உள்பட 3 போ் காயம்

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ரூ. 1 லட்சம் போதைப் பொருள்கள் கடத்தல்: தம்பதி கைது

கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

SCROLL FOR NEXT