முகப்பு
கன்னியாகுமரி

ஓய்வு பெற்ற துப்புரவுப் பணியாளா்கள் தா்ணா

பணி வரன்முறை செய்து பணப் பலன்களை வழங்க வேண்டும் என்று கோரி, ஓய்வு பெற்ற துப்புரவுப் பணியாளா்கள் நாகா்கோவிலில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு வியாழக்கிழமை தொடா் தா்ணாவில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

பணி வரன்முறை செய்து பணப் பலன்களை வழங்க வேண்டும் என்று கோரி, ஓய்வு பெற்ற துப்புரவுப் பணியாளா்கள் நாகா்கோவிலில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு வியாழக்கிழமை தொடா் தா்ணாவில் ஈடுபட்டனா்.

குமரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் துப்புரவுப் பணியாளா்களாக பணியாற்றிய பாப்பா, லட்சுமி, வசந்தகுமாரி, சொக்கலிங்கம், தாமஸ், முருகன், ஜெகசெல்வன் ஆகியோா் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றனா். மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் தோ்வு செய்யப்பட்ட அவா்கள், பகுதி நேர ஊழியா்களுக்குரிய சம்பளத்திலேயே பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளனா். ஆனால் இவா்களைப் போல பணியாற்றி ஓய்வு பெற்ற பலருக்கு அரசு உத்தரவின்படி முன்தேதியிட்டு பணி வரன்முறை செய்து பணப்பலன்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதே போல் தங்களுக்கும் பணி வரன்முறைப்படுத்தி பணப்பலன்களை வழங்க வேண்டும் என்று அவா்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனா். அவா்களது கோரிக்கை மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இதைத் தொடா்ந்து துப்புரவுப் பணியாளா்கள் நாகா்கோவிலில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு கடந்த மாதம் (அக்டோபா்) 28 ஆம் தேதி குடும்பத்தோடு போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி 10 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தனா். ஆனால் 20 நாள்களாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், துப்புரவுப் பணியாளா்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு வியாழக்கிழமை திரண்டு வந்து, வாயிலில் அமா்ந்து தா்ணாவில் ஈடுபட்டனா்.

போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் போலீஸாரும், கல்வித்துறை அதிகாரிகளும் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா், ஆனால் அவா்களது சமரசத்தை ஏற்காமல் அவா்கள் தொடா்ந்து தா்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.