மேற்கு ஆசிய போர்: நாட்டின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை! பிரதமர் மோடி
மேற்கு ஆசிய போர் குறித்தும் விளைவுகள் குறித்தும் மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசியது தொடர்பாக...
மேற்கு ஆசிய போரால் வணிக ரீதியாக கடும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளபோதிலும், நாட்டின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 24) தெரிவித்தார்.
மேற்கு ஆசிய போர் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்து மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
''மேற்கு ஆசியாவில் நிலவிவரும் பதற்றமான சூழல் குறித்து அரசு விழிப்புடன் உள்ளது. போரின் விளைவுகள் நாட்டு மக்களை பாதிக்காத வகையில் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
Advertisement
Advertisement
மேற்கு ஆசியாவில் நேர்ந்துவரும் போர் நம் அனைவரையும் பாதித்துள்ளது. இந்த போரில் அரசின் நிலைப்பாடு குறித்து அவை முன்பும் மக்கள் முன்பும் தெரிவிக்க வேண்டியது அவசியம்.
ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான போர் மூன்று வாரங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த போரால் உலகில் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வணிக வழித்தடங்களை இப்போர் கடுமையாக பாதித்துள்ளது. இந்த வழித்தடத்தில் கிடைக்கக்கூடிய எரிபொருள், டீசல், பெட்ரோல், உரங்கள் போன்றவற்றிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
நாட்டிற்காக 65 லட்சத்திற்கும் அதிகமான மெட்ரிக் டன் எரிவாயுவை ஏற்பாடு செய்யும் பணிகளில் அரசு ஈடுபட்டுள்ளது. இதனுடன், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் சுத்திகரிப்பு திறனும் அதிகரித்துள்ளது. இந்தியாவிடம் தேவையான அளவு கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது. தடையற்ற விநியோக ஏற்பாடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
கப்பல்கள் கட்டுமானத்திற்காக ரூ. 70,000 கோடி மதிப்புடைய திட்டங்களை அரசு தொடங்கியுள்ளது. போர் தொடங்கியதில் இருந்து ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து கடும் சவாலானதாக மாறியுள்ளது.
இத்தகைய பாதகமான சூழலிலும் பேச்சுவார்த்தைகளின் மூலம் சுமூகமான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுள்ளது.
போரை நிறுத்துவதும், மீண்டும் ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படுவதையும் நோக்கமாகக் கொண்டு அதற்குத் தேவையான முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அனைத்துத் தரப்பினரிடமும் இந்த நோக்கத்தை அரசு வலியுறுத்துகிறது'' எனக் குறிப்பிட்டார்.
மேற்கு ஆசிய போர் குறித்து மக்களவையில் நேற்று பேசிய பிரதமர் மோடி, போரால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் மட்டுமின்றி தேசிய பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான உதவிகள் குறித்தும் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Steps taken to meet the country's fuel needs PM Modi in Rajya Sabha
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.