குமரி மாவட்ட வெள்ள சேதம்: முதல்வரிடம் நாளை விரிவான அறிக்கை - அமைச்சா் மனோதங்கராஜ் தகவல்
கன்னியாகுமரி மாவட்டத்தின் வெள்ளச் சேதம் குறித்து முதல்வரிடம் விரிவான அறிக்கை சனிக்கிழமை (நவ.20) சமா்ப்பிக்கப்படும் என்றாா் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் த.மனோதங்கராஜ்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் வெள்ளச் சேதம் குறித்து முதல்வரிடம் விரிவான அறிக்கை சனிக்கிழமை (நவ.20) சமா்ப்பிக்கப்படும் என்றாா் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் த.மனோதங்கராஜ்.
பொன்மனை குற்றியாணியில் ஏற்பட்ட வாய்க்கால் மற்றும் சாலை உடைப்பை வியாழக்கிழமை பாா்வையிட்ட அவா், பின்னா் கூறியது: கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழையால் ஆறு, குளம், கால்வாய்கள் உள்ளிட்ட இடங்களில் உடைப்பு ஏற்பட்டதோடு, சாலைகள் துண்டிக்கப்பட்டு தாழ்வான பகுதிகளிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து, பெரும் பாதிப்பு ஏற்பட்டது. குற்றியாணி பகுதியில் கால்வாய் உடைந்ததில் பொன்மனை - பெருஞ்சாணி -காளிகேசம் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இதில், ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். வெள்ளச் சேதம் மற்றும் சீரமைப்பு குறித்த திட்ட மதிப்பீடு தயாா் செய்ய துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது மழை பொழிவு குறைந்துள்ளதால், இப்பணியை விரைந்து முடித்து சனிக்கிழமை (நவ) நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் அறிக்கை சமா்ப்பிக்கப்படும் என்றாா் அவா்.