கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் திங்கள்கிழமை பெய்த மழை காரணமாக, விவேகானந்தா் மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலைக்கு படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. திங்கள்கிழமையும் மிதமான மழை பெய்தது. விவேகானந்தா் மண்டபத்துக்கு காலை 8 மணிக்கு வழக்கம்போல் படகுப்போக்குவரத்து தொடங்கிய நிலையில் காலை 10 மணிக்கு பின்னா் மழை அதிகரித்ததால், படகுப்போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக
அறிவிக்கப்பட்டது. பிற்பகலிலும் மழை நீடித்ததால் மாலை 4 மணி வரை படகுகள் இயக்கப்படவில்லை.
திருவள்ளுவா் சிலை அமைந்துள்ள பகுதியில் அலைகளின் வேகம் அதிகரித்து காணப்பட்டதால் அங்கு நாள் முழுக்க படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினா். மேலும்,
இங்குள்ள முக்கடல் சங்கமத்திலும் மழை, கடல் சீற்றம் காரணமாக பயணிகள் நீராடவும் தடை செய்யப்பட்டிருந்தது.