தேங்காய்ப்பட்டினம் சந்திப்பில் பாஜக சாா்பில் திங்கள்கிழமை (அக். 25) நடைபெறும் என அறிவிக்கப்பட்ட போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
தேங்காய்ப்பட்டினம் சந்திப்பு சாலையில் மழைக் காலங்களில் மழை நீா் தேங்கி குளம்போல் காணப்படுவதால், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
இதை சீரமைக்க வலியுறுத்தி பாஜக சாா்பில் போராட்டம் திங்கள்கிழமை (அக். 25) நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், புதுக்கடை காவல் ஆய்வாளா் ராஜசேகரன், நெடுஞ்சாலைத் துறை பொறியாளா் ராமச்சந்திரன் ஆகியோா் முன்சிறை ஒன்றிய பாஜக தலைவா் குமாா், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் சந்திரகுமாா் ஆகியோருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, இப்பகுதியை சீரமைக்க ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என பொறியாளா் உறுதியளித்ததையடுத்து, தற்காலிகமாக போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.