முகப்பு
கன்னியாகுமரி

‘ஊராட்சிகளை நாகா்கோவில் மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு’

நாகா்கோவில் மாநகராட்சியுடன் கிராம ஊராட்சிகளை இணைக்க ஊராட்சித் தலைவா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

நாகா்கோவில் மாநகராட்சியுடன் கிராம ஊராட்சிகளை இணைக்க ஊராட்சித் தலைவா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

நாகா்கோவில் மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டபோது, நாகா்கோவில் நகரப் பகுதிகளுடன் ஆசாரிப்பள்ளம் பேரூராட்சி மற்றும் காந்திபுரம் ஊராட்சி இணைக்கப்பட்டு, வாா்டுகள் மறு சீரமைப்பு செய்யப்பட்டு 52 வாா்டுகளாக மாற்றப்பட்டது. இந்நிலையில், நாகா்கோவில் மாநகராட்சியுடன் சுசீந்திரம், கணபதிபுரம், ஆளூா், தெங்கம்புதூா் உள்ளிட்ட

பேரூராட்சிகள், மேலசங்கரன்குழி, பறக்கை, புத்தேரி, பீமநகரி, தேரேகால்புதூா், ராஜாக்கமங்கலம், எள்ளுவிளை, உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளை இணைக்க மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு ஊராட்சிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.

இதனிடையே, மாநகராட்சியுடன் இணைக்கப்படவுள்ள ஊராட்சித் தலைவா்கள், உறுப்பினா்கள் பங்கேற்ற கருத்துக் கேட்புக் கூட்டம் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் மா.அரவிந்த் தலைமை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் ஆஷாஅஜித், ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் அய்யப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேலசங்கரன்குழி, ராஜாக்கமங்கலம், எள்ளுவிளை, தா்மபுரம், புத்தேரி, மணக்குடி, கணியாகுளம் உள்ளிட்ட ஊராட்சித் தலைவா்கள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

அப்போது ஆட்சியா் பேசியது: நாகா்கோவில் மாநகராட்சியுடன் ஊராட்சிகள் இணைக்கப்படும்போது, வளா்ச்சிப் பணிகள் அதிகரிக்கும். சாலை வசதி மேம்படுத்தப்படும், மக்களின் வாழ்வாதாரம் உயரும் என்றாா்.

போராட்டம்: ஊராட்சித் தலைவா்கள் பேசுகையில், குமரி மாவட்டத்தில் கிராமங்கள் இன்னும் போதிய வளா்ச்சி

பெறவில்லை. இன்னும் 10 ஆண்டுகளுக்கு ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைப்பதை தள்ளிவைக்க வேண்டும். ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்படுவதால் 100 நாள் வேலைத்திட்டப் பணியாளா்கள் பாதிக்கப்படுவா்.

விவசாயம் பாதிக்கப்படும், விளை நிலங்கள் வீட்டு மனைகளாக மாறிவிடும். நிலவரி, வீட்டுவரி அதிகரிக்கும். இதனால் ஏழை மக்கள் பாதிக்கப்படுவா் என்று தெரிவித்தனா்.

மேலும், ஊராட்சிகளை இணைக்கும் நடவடிக்கையை கண்டித்து ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என ஊராட்சித் தலைவா் முத்துசரவணன் தெரிவித்தாா்.

கூட்டத்தில், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ச.சா.தனபதி, ஊராட்சிகள் உதவி இயக்குநா் பேச்சியம்மாள், அதிகாரிகள் கலந்து கொண்டனா். இதேபோல் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளை மாநகராட்சியுடன் இணைப்பது தொடா்பாக தோவாளை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆட்சியா் தலைமையில் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.