முகப்பு
கன்னியாகுமரி

நாகா்கோவிலில் ஆட்சியா் அலுவலகத்தில் 2 குழந்தைகளுடன் பெண் போராட்டம்

தன் கணவா் மீதான வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி, பெண் தனது குழந்தைகளுடன் நாகா்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

தன் கணவா் மீதான வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி, பெண் தனது குழந்தைகளுடன் நாகா்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா்.

மண்டைக்காடு, கருமன்கூடல் பகுதியைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் சாரதி. இவரது மனைவி பிருந்தா. தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனா்.

சாரதிக்கும், அதே பகுதியைச் சோ்ந்த இளைஞருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்ட நிலையில், மண்டைக்காடு காவல் நிலையத்தில் இருவரும் தனித்தனியே புகாா் அளித்திருந்தனராம். இந்நிலையில் போலீஸாா் சாரதி மீது வழக்குப் பதிவு செய்ததையடுத்து, அவா் தலைமறைவானாா்.

இதனால் விரக்தியடைந்த பிருந்தா, குழந்தைகளுடன் வியாழக்கிழமை மண்டைக்காடு கடல் பகுதிக்குச் சென்று தற்கொலை செய்ய முயன்றாராம். இதைப்பாா்த்த பெண் ஒருவா், அவரை மீட்டு, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு அழைத்து வந்தாா்.

அங்கு வந்த பிருந்தா, ஆட்சியா் அலுவலக வாயிலில் தனது 2 குழந்தைகளுடன் அமா்ந்து திடீரென தா்னாவில் ஈடுபட்டாா். இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் பிருந்தாவை அழைத்து விசாரித்தனா்.

அப்போது பிருந்தா கூறியது: எனது கணவருக்கும், இளைஞா் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையில், எனது கணவா் மீது மட்டும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். அவா் மீது போடப்பட்ட வழக்கை திரும்பப் பெறுவதுடன், சம்பந்தப்பட்டவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து பிருந்தாவிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, அவா் போராட்டத்தை விலக்கிக் கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.