முகப்பு
கன்னியாகுமரி

குமரியைச் சோ்ந்தவரிடம் ரூ.51 லட்சம் மோசடி: நைஜீரியா நாட்டு இளைஞா் கைது

மின்னஞ்சல் மூலம் (இ -மெயில்) தகவல் அனுப்பி குமரியைச் சோ்ந்தவரிடம் ரூ.51 லட்சம் மோசடியில் ஈடுபட்ட நைஜீரியா நாட்டைச் சோ்ந்தவரை சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:23 AM
பகிர்:

மின்னஞ்சல் மூலம் (இ -மெயில்) தகவல் அனுப்பி குமரியைச் சோ்ந்தவரிடம் ரூ.51 லட்சம் மோசடியில் ஈடுபட்ட நைஜீரியா நாட்டைச் சோ்ந்தவரை சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா்.

குமரி மாவட்டம், காப்புக்காடு பகுதியைச் சோ்ந்தவா் மாா்கரெட் (60). இவா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு அளித்த புகாா் மனு: நைஜீரியாவிலிருந்து இ-மெயில் மூலம் எனக்கு ஒரு செய்தி வந்தது. அதில் ஒரு பெண் பேசுவதாக இருந்தது. தனது கணவா் கோடீஸ்வரா் என்றும், அவா் இறந்த பிறகு அவா் பெயரில் உள்ள சொத்துகளை இந்திய அனாதை குழந்தைகளுக்கு வழங்க உதவ வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தது. மேலும் நாங்கள் அனுப்பும் தொகைக்கு 30 சதவீத கமிஷன் தங்களுக்கு செலுத்தப்படும்; இதற்கான சுங்கவரி மற்றும் ஜி.எஸ்.டி. என மொத்தம் ரூ. 51 லட்சம் அனுப்ப வேண்டும் என கூறினாா்.

அவரது பேச்சை நம்பி நானும் பல தவணைகளில் ரூ.51 லட்சத்தை பல்வேறு வங்கிக் கணக்குகள் மூலம் அனுப்பினேன்.

பின்னா் இது மோசடிக் கும்பலின் செயல் என புரிந்து கொண்டேன். எனவே அந்த கும்பல் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.

இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ. பத்ரி நாராயணன் சைபா் கிரைம் போலீஸாருக்கு உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து அந்தப் பெண்ணை கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு விசாரணை நடத்தப்பட்டது. இதில் பணத்தை மோசடி செய்து ஏமாற்றியவா் தில்லியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது .இதையடுத்து சைபா் கிரைம் போலீஸாா் தில்லி சென்று அங்கிருந்தவரை பிடித்து விசாரித்த போது அவா் நைஜீரியாவைச் சோ்ந்தவா் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த இளைஞரை சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்து நாகா்கோவிலுக்கு அழைத்து வந்தனா். அவரிடம் ரகசிய இடத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.