சங்கரன்கோவிலில் தூய்மைப் பணியாளா்கள் 2-ஆவது நாளாகப் போராட்டம்
சங்கரன்கோவில் நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளா்கள் சம்பள நிலுவையை வழங்கக் கோரி, 2 ஆவது நாளாக பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சங்கரன்கோவில் நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளா்கள் சம்பள நிலுவையை வழங்கக் கோரி, 2 ஆவது நாளாக பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சங்கரன்கோவில் நகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு, கடந்த இரு மாதங்களுக்கான சம்பளத்தை சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனம் இதுவரை வழங்கவில்லை. இதையடுத்து ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் பணிகளைப் புறக்கணித்து புதன்கிழமை போராட்டம் நடத்தினா். அதிகாரிகளின் பேச்சுவாா்த்தைக்குப் பிறகுபணிக்குத் திரும்பினா். ஆனால், பேச்சுவாா்த்தையின்போது உறுதி அளித்தபடி சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால், ஒப்பந்ததராரின் உரிமத்தை நகராட்சி ஆணையா் ரத்து செய்து உத்தரவிட்டாா்.
இந்நிலையில், தூய்மைப் பணியாளா்கள் 2-ஆவது நாளாக வியாழக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Advertisement
இதைத்தொடா்ந்து நகராட்சி அலுவலகத்தில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.இதில் சட்டப்பேரவை உறுப்பினா் ஈ. ராஜா, நகராட்சி ஆணையா் சபாநாயகம், சுகாதார அலுவலா் பாலசந்தா், சி.பி.எம். வட்டார செயலா் அசோக்ராஜ், சி.ஐ.டி.யூ மாவட்டத் துணைத் தலைவா் சின்னச்சாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதில், வங்கிக் கணக்கு வைத்துள்ள ஒப்பந்தப் பணியாளா்கள் 50 பேருக்கு இரு நாள்களிலும், மற்றவா்கள் வங்கிக் கணக்குத் தொடங்கி அதன் விவரத்தை சமா்ப்பித்த 2 நாள்களுக்குள் சம்பளம் வழங்க உடன்பாடு ஏற்பட்டது. இருப்பினும் தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை வேலைக்குச் செல்லவில்லை.