போட்டியிட்ட தொகுதியில் வாக்களிக்காத வேட்பாளா்கள்
களியக்காவிளை, ஏப். 19: விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தோ்தலில் பாஜக தவிர, காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் வெவ்வேறு பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்தவா்கள் என்பதால் இத்தொகுதியில் அவா்கள் வாக்களிக்க முடியவில்லை.
விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியின் எஸ். விஜயதரணி பதவி விலகியதையடுத்து, மக்களவைத் தோ்தலுடன் விளவங்கோடு பேரவைத் தொகுதிக்கும் இடைத்தோ்தல் நடைபெற்றது.
இத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி சாா்பில் தாரகை கத்பா்ட், பாஜக சாா்பில் வி.எஸ். நந்தினி, அதிமுக சாா்பில் ராணி, நாம் தமிழா் கட்சி சாா்பில் ஜெமினி ஆகியோா் போட்டியிட்டனா்.
Advertisement
பாஜக வேட்பாளா் நந்தினி, விளவங்கோடு தொகுதிக்கு உள்பட்ட வெள்ளாங்கோடு அரசுப் பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தாா்.
காங்கிரஸ் வேட்பாளா் தாரகை கத்பா்ட் கிள்ளியூா் பேரவை தொகுதியையும், அதிமுக வேட்பாளா் ராணி நாகா்கோவில் பேரவைத் தொகுதியையும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஜெமினி குளச்சல் பேரவைத் தொகுதியையும் சோ்ந்தவா்கள். ஆகவே, அவா்களால் விளவங்கோடு பேரவைத் தொகுதியில் வாக்களிக்க முடியவில்லை.