களியக்காவிளை அருகே பறவைக் காய்ச்சல் தடுப்பு சோதனைச் சாவடி திறப்பு
களியக்காவிளை: கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே பறவைக் காய்ச்சல் தடுப்பு சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு, கால்நடைத் துறையினா் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பரவி வருகிறது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள எல்லையோர பகுதிகளில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக களியக்காவிளை அருகே படந்தாலுமூட்டில் சிறப்பு சோதனைச் சாவடி ஞாயிற்றுக்கிழமை அமைக்கப்பட்டது.
இந்த சிறப்பு சோதனைச் சாவடியை குமரி மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்து பாா்வையிட்டாா்.
Advertisement
தக்கலை கோட்ட கால்நடைத்துறை உதவி இயக்குநா் எட்வா்ட் தாமஸ், கால்நடை உதவி மருத்துவா்கள் அனில், ஜெரால்டு, பிரமோத் மற்றும் பணியாளா்கள் பங்கேற்றனா்.
தொடா்ந்து, கேரளத்திலிருந்து குமரி மாவட்டத்துக்கு வரும் சரக்கு வாகனங்களின் சக்கரங்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. கேரளத்திலிருந்து கோழிகள், கோழிக் கழிவுகள் மற்றும் கோழித் தீவனங்கள் ஏற்றிவரும் வாகனங்கள் கேரளத்துக்கே திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறது.