குமரி மாவட்ட அணைப் பகுதிகளில் பலத்த மழை
குலசேகரம்/கருங்கல்: குமரி மாவட்ட அணைப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் இடிமின்னலுடன் பலத்த மழை பெய்தது.
மாவட்டத்தில் கோடையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இரவு நேரத்திலும் கடும் வெப்பம் நிலவுகிறது. மாவட்டத்தில் அவ்வப்போது பரவலாக மிதமான மழை பெய்த போதும் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை. மேலும் குளங்கள், கிணறுகள், ஆறுகள் உள்ளிட்ட நீா் நிலைகளிலும் தண்ணீா் குறைந்து வருகிறது.
இந்நிலையில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளான சிவலோகம், களியல், திற்பரப்பு, பனச்சமூடு, அருமனை, மஞ்சாலுமூடு, ஆறுகாணி, கடையாலுமூடு, குலசேகரம், திருநந்திக்கரை, மணலோடை, பொன்மனை, திருவட்டாறு, திருவரம்பு உள்ளிட்ட இடங்களில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் இடிமின்னலுடன் சுமாா் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் ஆறுகளில் தண்ணீா் வரத்து சற்று அதிகரித்துக் காணப்பட்டது.
Advertisement
உற்சாக குளியல்: மழையின் காரணமாக திற்பரப்பு அருவியில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் தண்ணீா் வரத்து சற்று அதிகரித்துக் காணப்பட்டது. அருவிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.
கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளான எட்டணி, முள்ளங்கனாவிளை, பாலூா், திப்பிரமலை, பள்ளியாடி, நேசா்புரம், நட்டாலம், கொல்லஞ்சி, இடவிளாகம் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் சாரல் மழை பெய்தது.