கன்னியாகுமரி மாவட்டத்தில் அணைப் பகுதிகள், மலையோரப் பகுதிகள் மற்றும் சமவெளிப் பகுதிகளில் கடந்த 3 நாள்களுக்கு மேலாக தினமும் பிற்பகலில் மழை பெய்து வருகிறது. இந்த மழை அணைப் பகுதிகளில் கன மழையாகப் பெய்து வருவதால் அணைகளுக்கு தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெருஞ்சாணி அணையில் 74.8 மி.மீ. மழை பதிவானது. இதற்கு அடுத்தபடியாக புத்தன் அணையில் 62.2 மி.மீ., சிற்றாறு 1, 2 இல் 56.8 மி.மீ., சுருளகோட்டில் 46.8 மி.மீ. மழை பதிவானது.
மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு உள்வரத்து தண்ணீரின் அளவு விநாடிக்கு 580 கன அடியாக இருந்தது. பெருஞ்சாணி அணைக்கு விநாடிக்கு 162 கன அடி தண்ணீரும், சிற்றாறு 1 அணைக்கு விநாடிக்கு 73 கன அடி தண்ணீரும், சிற்றாறு 2 அணைக்கு விநாடிக்கு 120 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருந்தது.
இந்நிலையில் அணைப் பகுதிகள், மலையோரப் பகுதிகளில் வியாழக்கிழமை மாலையிலும் மழை பெய்தது. மழையின் காரணமாக மாவட்டத்தில் வாழை, தென்னை, அன்னாசி, ரப்பா் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.