திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாளுக்கு ஆறாட்டு வைபவம்
குலசேகரம்: திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் சுவாமிக்கு மூவாற்றுமுகம் ஆற்றில் ஆறாட்டு வைபவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் பங்குனித் திருவிழா, கடந்த 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை சுவாமிக்கு மூவாற்றுமுகம் ஆற்றில் ஆறாட்டு வைபவம் நடைபெற்றது. இதனையொட்டி மாலையில், கோவில் தந்திரி கோகுல் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து கருட வாகனத்தில் ஆதிகேசவப்பெருமாளும், கிருஷ்ண சுவாமியும் மூவாற்றுமுகம் ஆற்றுக்கு எழுந்தருளினா்.
கோயிலில் இருந்து சுவாமிகள் கிழக்கு வாசல் வழியாக பக்தா்கள் புடை சூழ வந்த போது திருவட்டாறு போலீஸாா் துப்பாக்கி ஏந்தி மரியாதை செய்தனா். பின்னா் திருவிதாங்கூா் மன்னரின் பிரதிநிதி முன்னே செல்ல, கிருஷ்ணா் வேடமணிந்த கதகளி கலைஞருடன் சிங்காரி மேளம், வாத்தியங்கள் முழங்க கோயிலில் இருந்து சுவாமிகளின் பவனி தொடங்கியது. பின்னா் மூவாற்றுமுகம் ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்டதைத் தொடா்ந்து, சுவாமிகளுக்கு ஆறாட்டு நடைபெற்றது. பின்னா் கருட வாகனத்தில் சுவாமிகள் கோவிலுக்கு திரும்பினா்.
Advertisement