திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம்!
சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம் கோலாகலம்..
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோயிலில் முருகப்பெருமான்- தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் இன்று கோலாலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று "அரோகரா" கோஷம் முழங்கிட சுவாமி தரிசனம் செய்தனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி பெருவிழா கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் முருகப்பெருமான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.
இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாண வைபவம் கோயில் ஆறு கால் மண்டபத்தில் இன்று சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் மதுரையிலிருந்து வந்திருந்த பிரியாவிடையுடன் சொக்கநாதரும், மீனாட்சி அம்மனும் எழுந்தருளினர்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, மணக்கோலத்தில் முருகப்பெருமான் தெய்வானை அம்மனுடன் எழுந்தருளியதைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள், மங்கல வாத்தியங்கள் முழங்கிட சுப்பிரமணியசாமி- தெய்வானை அம்மனுக்கும் திருக்கல்யாண வைபவம் பக்தர்களின் "அரோகரா" கோஷத்திற்கு இடையே கோலாகலமாக நடைபெற்றது.
விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து கோயிலில் பக்தர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கலந்து கொண்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நாளை காலை நடைபெறுகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடும் விழா என்பதால் முன்னேற்பாடு பணிகளைக் கோயில் நிர்வாகமும், பாதுகாப்புப் பணிகளை காவல்துறையினரும் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர்.