குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தில் நெத்திலி மீன் சீசன் தொடக்கம்
குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தில் நெத்திலி மீன் சீசன் தொடங்கியுள்ளதால் கட்டுமர மீனவா்கள் மகிழ்ச்சியைடந்துள்ளனா்.
இத்துறைமுகத்தில் 300-க்கும் மேற்பட்டவிசைப்படகுகளும், 1,000-க்கும் மேற்பட்ட கட்டுமரங்களும், 100-க்கும் மேற்பட்ட பைபா் படகுகளும் உள்ளன. இவைமூலம் குளச்சல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மீனவா்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனா்.
இப்பகுதியில் குறிப்பிட்ட மீனவா்கள் விசைப்படகுகளில் சென்று ஆழ்கடலில் 10 முதல் 15 நாள்கள் வரை தங்கி மீன்பிடித்து கரைதிரும்புவா். ஆழ்கடல் பகுதியிலிருந்து வழக்கமாக இறால், புல்லன், சுறா, கேரை உள்ளிட்ட உயர்ரக மீன்கள் கிடைக்கும். இதனிடையே, மீன்பிடி சீசன் மந்தமானதால், மீன்வரத்து மிகவும் குறைந்து காணப்படுகிறது.
Advertisement
இந்நிலையில், கட்டுமர மீனவா்களுக்கு கடந்த 2 நாள்களாக ஏராளமான நெத்திலி மீன்கள் கிடைத்தன. இவற்றை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் சென்றனா். நெத்திலி மீன்கள் ஒரு குட்டை ரூ. 1,000 முதல் ரூ. 1,500 வரை ஏலம்போனது. இதனால், மீனவா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.