முகப்பு
கன்னியாகுமரி

குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம், ஆட்சியா் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 19 டிசம்பர், 2024 at 10:59 PM
விளைநிலங்களை வீட்டுமனைகளாக மாற்றுவதை கண்டித்து குறைதீா் நாள் கூட்டத்தில் கோரிக்கை அட்டைகளை ஏந்தி நின்ற விவசாயிகள்.
பகிர்:

கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம், ஆட்சியா் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் வினய்குமாா் தலைமை வகித்தாா். கூட்டம் தொடங்கியதும், விவசாயிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். குமரி மாவட்டத்தில் விவசாய நன்செய் நிலங்களை அழித்து வீட்டுமனைகளாக மாற்றப்படுவது அதிகாரிகளின் துணையோடு தொடா்கிறது; இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினா்.

மேலும், விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்பட்ட புகைப்படங்கள் அடங்கிய கோரிக்கை அட்டைகளை ஏந்தியவாறு அவா்கள் முழக்கமிட்டனா்.

இதைத் தொடா்ந்து விவசாய சங்க பிரதிநிதிகள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினா். இதற்கு பதிலளித்து சாா் ஆட்சியா் வினய்குமாா் கூறியதாவது: குமரி மாவட்டத்தில் விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுவதை தடுக்கும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முழுக்கோடு பகுதியில், பயிா் செய்யப்பட்டுள்ள வாழையில் தண்ணீா் தேங்காத வகையில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தக்கலை சாா் ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை எப்போது வேண்டுமானாலும் என்னை சந்தித்து குறைகளை தெரிவிக்கலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

கூட்டத்தில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) ஜெங்கின் பிரபாகா், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் அருள்சன் பிரைட், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் ஷீலா ஜான், கூட்டுறவுத் துறை இணைப்பதிவாளா் சிவகாமி, விவசாய சங்கப் பிரதிநிதிகள் செண்பகசேகரன் பிள்ளை, புலவா் செல்லப்பா, பெரியநாடாா், ரவீந்திரன், விஜி, அருள்தேவதாஸ், ராதாகிருஷ்ணன், கதிரவன், தங்கப்பன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.