கன்னியாகுமரி மாவட்டத்தில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ள நிலையில், திற்பரப்பு அருவியில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
இம்மாவட்டத்தில் தென்மேற்குப் பருவ மழையால் அணைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன. பேச்சிப்பாறை அணையில் வெள்ள அபாயத்தைத் தடுப்பதற்காக அவ்வப்போது உபரிநீா் வெளியேற்றப்படுகிறது.
இதனிடையே, சில நாள்களாக ஓய்ந்திருந்த மழை, ஞாயிற்றுக்கிழமை காலைமுதல் மீண்டும் பெய்யத் தொடங்கியது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகள், கடையாலுமூடு, ஆறுகாணி, அருமனை, குலசேகரம், திற்பரப்பு, களியல், திருவட்டாறு உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
விடுமுறை நாள் என்பதால் திற்பரப்பு அருவிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா். அவா்கள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா். அங்குள்ள சிறாா் நீச்சல் குளம், படகு சவாரி பகுதிகளிலும், மாத்தூா் தொட்டிப் பாலத்திலும் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.