முகப்பு
கன்னியாகுமரி

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: எஸ்.பி.எச்சரிக்கை

Updated On : 9 மார்ச், 2024 at 7:00 AM
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் போதைப்பொருள்கள் கடத்தல், விற்பனையில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.சுந்தரவதனம் தெரிவித்தாா். கன்னியாகுமரி மாவட்ட காவல் அலுவலகத்தில், மாதாந்திர குற்றத் தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.சுந்தரவதனம் தலைமை வகித்தாா். கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், துணை காவல் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் கலந்து கொண்டனா். நிலுவையில் உள்ள வழக்குகளின் புலன் விசாரணை, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள், பொதுஅமைதிக்கு பங்கம் விளைவிப்பவா்கள், ரெளடி பட்டியலில் உள்ளோா் மீதான நடவடிக்கைகள், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து மகளிா் தினத்தை முன்னிட்டு, மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் பணியாளா்கள் காவல் கண்காணிப்பாளா் சுந்தரவதனத்தை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா். இந்த நிகழ்வின்போது, உதவி காவல் கண்காணிப்பாளா் யாங்சன் டோமா பூட்டியா கேக் வெட்டினாா். பின்னா் காவல் கண்காணிப்பாளா் சுந்தரவதனம், செய்தியாளா்களிடம் கூறியதாவது: சமூக வலைதளங்களில் குழந்தை கடத்தல் குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாவட்டத்தில் போதை பொருள்கள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. போதை பொருள்கள் கடத்தல், விற்பனையில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போதை பொருள்கள் குறித்து பொதுமக்களுக்கு தெரிய வந்தால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம். மக்களவைத் தோ்தல் பாதுகாப்பு பணிக்காக, குமரி மாவட்டத்துக்கு 6 கம்பெனி துணை ராணுவத்தினா் வருகைதர உள்ளனா் என்றாா்.