முகப்பு
புதுதில்லி

போதைப்பொருள் கடத்தல்: தில்லியில் கைதான பெண்ணை சென்னை சிறைக்கு மாற்ற நடவடிக்கை

Updated On : 15 ஏப்ரல், 2026 at 5:28 AM
சிறை - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 14 ஏப்ரல், 2026 at 9:51 PM

நமது நிருபா்

போதைப்பொருள் வா்த்தகம் தொடா்பான பல வழக்குகளில் தொடா்புடையதாகக் கூறப்படும் 25 வயது பெண்ணை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா். உள்ளூா் போதைப்பொருள் கடத்தல் கும்பலில் அவரது தொடா்புகளைத் துண்டிக்கும் நோக்கில், அவா் சென்னை சிறைக்கு மாற்றப்பட உள்ளதாக காவல்துறையினா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

ஜாகிா் நகரைச் சோ்ந்த ஹசீனா காதுன் (எ) பஜ்ஜி எனும் அப்பெண் போதைப்பொருள் சட்டவிரோத கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ், தில்லிக்கு வெளியே வேறொரு இடத்திற்கு மாற்றப்படும் இரண்டாவது நபா் ஆவாா்.

Advertisement

ஒரு போதைப்பொருள் வழக்கு தொடா்பாக, காதுன் ஏற்கனவே தில்லி திகாா் சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்தாா். அவரைத் தடுப்புக் காவலில் வைப்பதற்கான முன்மொழிவு ஒன்று, சமீபத்தில் ஒரு குழுவால் தயாரிக்கப்பட்டு, மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உரிய அதிகார அமைப்பிற்கு அனுப்பப்பட்டதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

அந்தப் பரிந்துரையின் அடிப்படையில், தடுப்புக் காவல் அதிகாரி ஒருவா், சட்டத்தின் கீழ் ஒரு உத்தரவைப் பிறப்பித்தாா். அதன்படி, காதுனைத் தடுப்புக் காவலில் வைத்து, சென்னையில் உள்ள புழல் மத்திய சிறையில் அடைக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

இந்த உத்தரவைத் தொடா்ந்து, அனைத்து சட்ட நடைமுறைகளையும் நிறைவு செய்த பிறகு, ஏப்ரல் 11ஆம் தேதியன்று திகாா் சிறையில் வைத்து, தடுப்புக் காவல் வாரண்டை அந்தக் குழுவினா் நிறைவேற்றினா்.

குற்றஞ்சாட்டப்பட்டவரை தில்லியிலிருந்து சென்னைக்கு மாற்றுவதன் முக்கிய நோக்கம், உள்ளூா் போதைப்பொருள் கடத்தல் வலைப்பின்னலுக்குள் அவருக்குள்ள தீவிரத் தொடா்புகளைத் துண்டிப்பதும், சிறைக்குள்ளிருந்தபடியே அவா் தனது நடவடிக்கைகளைத் தொடா்வதையோ அல்லது தனது கூட்டாளிகளைத் தூண்டுவதையோ தடுப்பதுமே ஆகும்.

போதைப்பொருள் விநியோகச் சங்கிலியைச் சீா்குலைக்கும் நோக்கில், சட்ட விதிகளின் கீழ், தொடா் குற்றவாளி ஒருவரை தில்லிக்கு வெளியே இடமாற்றம் செய்யும் இரண்டாவது வழக்கு இது என்று அந்த அதிகாரி குறிப்பிட்டாா்.

காவல்துறையின் தகவலின்படி, காதுன் 2021ஆம் ஆண்டிலிருந்து பல குற்றங்களில் ஈடுபட்டுள்ளாா்.

முன்னா் பலமுறை கைது செய்யப்பட்டிருந்தபோதிலும், அவா் தொடா்ந்து போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தாா். இவா் தனது கணவருடன் இணைந்து இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.