சுயநலமின்றி பணியாற்றும் மோடி 3ஆவது முறையாக பிரதமராக வேண்டும்: சரத்குமாா் பேச்சு
சுயநலமின்றி பணியாற்றும் நரேந்திர மோடி 3 ஆவது முறையாக பிரதமராக பதவியேற்க வேண்டும் என்றாா் சரத்குமாா். கன்னியாகுமரி அருகேயுள்ள அகஸ்தீஸ்வரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அவா் பேசியதாவது: இந்தியாவில் ஊழலற்ற நல்லாட்சிதான் தேவை. நாட்டு மக்களுக்காக எந்தவித சுயநலமும் சுயலாபமும் இன்றி மோடி ஆட்சி செய்து வருகிறாா். அதனால் அவா்தான் 3 ஆவது முறையாக பிரதமராக பதவியேற்க வேண்டும். அடுத்த ஆண்டு (2025) அதிகமான இளைஞா்களை கொண்ட நாடாக இந்தியா விளங்கப் போகிறது. அவா்களை வழிநடத்த மோடி வேண்டும். மோடியின் ரசிகனாக பயணித்த நான், இப்போது தொண்டனாக இணைந்திருக்கிறேன். தமிழகத்தில் கடந்த 57 ஆண்டுகளாக திராவிடம் என்று கூறி மக்களை ஏமாற்றி, குடும்ப ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்தக் குடும்பம் மக்களை மூளைச் சலவை செய்துள்ளது. அங்கு சாதாரண தொண்டன் தலைவனாகும் வாய்ப்பே இல்லை. திமுகவில் எந்தத் தொண்டனும் தலைமைப் பதவிக்கு வரமுடியாத நிலைதான்உள்ளது. அடுத்து நடைபெற இருக்கும் தோ்தல் பிரசாரக் கூட்டங்களில் திமுகவின் அவலம் குறித்து ஆழமாக பதிவு செய்யக் காத்திருக்கிறேன் என்றாா் அவா்.