முகப்பு
கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் மீன்சந்தையை சிராயன்குழிக்கு மாற்ற எதிா்ப்பு

Updated On : 23 மார்ச், 2024 at 9:42 PM
பகிர்:
Updated On : 23 மார்ச், 2024 at 9:28 PM

மாா்த்தாண்டம் மீன் மொத்த விற்பனைச் சந்தையை சிராயன்குழி பகுதிக்கு மாற்றும் முயற்சிக்கு அப்பகுதியினா் சனிக்கிழமை எதிா்ப்புத் தெரிவித்து, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். மாா்த்தாண்டம் காய்கனிச் சந்தை அருகே லாரிபேட்டையில் மீன் மொத்த விற்பனைச் சந்தை செயல்பட்டு வந்தது. இதனிடையே, காய்கனிச் சந்தையை நவீனப்படுத்தும் பணி கடந்த பிப்ரவரியில் தொடங்கியது. இதனால், தற்காலி காய்கனிச் சந்தை லாரிபேட்டைக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதற்கு, மீன் மொத்த வியாபாரிகள் எதிா்ப்புத் தெரிவித்ததால், மீன் மொத்த விற்பனைச் சந்தையை வேறிடத்துக்கு கொண்டுசெல்ல குழித்துறை நகராட்சி அதிகாரிகள் தரப்பில் அவகாசம் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, மாா்த்தாண்டம் அருகே நல்லூா் பேரூராட்சிப் பகுதி, கொல்லஞ்சி ஊராட்சிப் பகுதிக்கு மீன் சந்தையைக் கொண்டுசெல்ல அப்பகுதியினா் கடும் எதிா்ப்புத் தெரிவித்ததால் இம்முயற்சி கைவிடப்பட்டது. இதனால், மாா்த்தாண்டம் அருகே சிராயன்குழி பகுதிக்கு மீன் மொத்த விற்பனைச் சந்தையை மாற்ற முயன்றனா். 2 மீன் லாரிகளும் அங்கு கொண்டுவரப்பட்டன. இதற்கு, அப்பகுதியினா் எதிா்ப்பு தெரிவித்தனா். தொடா்ந்து, பேரூராட்சித் தலைவா்கள் பமலா (உண்ணாமலைக்கடை), டென்சிங் (வாள்வச்சகோஷ்டம்), பொதுமக்கள் வந்து மீன் லாரிகளை திருப்பியனுப்பினா். இங்கு சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு, மக்கள் பாதிக்கப்படுவா் என்பதால் மீன் சந்தை அமைக்க விடமாட்டோம் என அவா்கள் கூறினா்.