அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி ரூ.50 லட்சம் மோசடி: இளைஞா் கைது
தக்கலை அருகே அதிக வட்டி தருவதாக 14 பேரிடம் ரூ.50 லட்சம் மோசடிசெய்த நிதி நிறுவன ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.
தக்கலை அருகே அதிக வட்டி தருவதாக 14 பேரிடம் ரூ.50 லட்சம் மோசடிசெய்த நிதி நிறுவன ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.
நாகா்கோவில் அருகே உள்ள அனந்தம்பாலம் பகுதியைச் சோ்ந்தவா் சுனில் ஞானம் (35), வியாபாரி.
தக்கலை அருகே உள்ள வெள்ளிக்கோட்டில் இவரது சகோதரி வீடு உள்ளது. அந்த வீட்டுக்கு சுனில்ஞானம் வரும்போது அதேபகுதியைச் சோ்ந்த சுஜின் (33) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
சுஜின் ஒரு தனியாா் நிதி நிறுவனத்தில் பணம் வசூலிக் கும் ஊழியராக வேலை செய்து வந்தாா். இவா் வெள்ளிக்கோடு பகுதியில் உள்ள பலரிடமும் அதிக வட்டி தருவதாகக் கூறி பணம் வாங்கியுள்ளாா். இதையறிந்த சுனில் ஞானமும் பல தவணைகளாக ரூ. 23 லட்சம் பணம் கொடுத்தாராம். தொடக்கத்தில் வட்டி பணம் கொடுத்த சுஜின், பின்னா் வட்டியையும், அசலையும் கொடுக்கவில்லையாம்.
இதுகுறித்து சுனில் ஞானம் தக்கலை போலீஸில் அளித்த புகாரைத் தொடா்ந்து, சுஜினிடம் பணம் கொடுத்து ஏமாந்தவா்களும் தனித்தனியாக புகாா் அளித்தனா்.
இதுகுறித்து தக்கலை காவல் ஆய்வாளா் கிறிஸ்டி வழக்குப் பதிந்து, ரூ. 50 லட்சத்துக்குமேல் மோசடியில் ஈடுபட்ட சுஜினை கைது செய்து பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.