கேரளத்துக்கு கடத்த முயன்ற 2100 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்
கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே வேனில் கேரளத்துக்கு கடத்த முயன்ற 2,100 லிட்டா் மண்ணெண்ணெய்யை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே வேனில் கேரளத்துக்கு கடத்த முயன்ற 2,100 லிட்டா் மண்ணெண்ணெய்யை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
மீனவா்களுக்கு மானிய விலையில் வழங்கும் மண்ணெண்ணெய்யை, கொல்லங்கோடு அருகேயுள்ள வள்ளவிளை மீனவ கிராமத்திலிருந்து சிலா் சொகுசு வேனில் கேரளத்துக்கு கடத்திச் செல்வதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து கண்ணநாகம் சந்திப்பில் செவ்வாய்க்கிழமை இரவு போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியே வந்த வேனை நிறுத்த சைகை காட்டியபோது, அந்த வேன் நிற்காமல்
சென்றது. அதையடுத்து போலீஸாா் துரத்திச் சென்று மாா்ஷல்புரம் பகுதியில் வேனை மடக்கினா்.
அந்த வேனை சோதனையிட்டபோது, அதில் ரகசிய அறை அமைத்து 35 லிட்டா் கொள்ளளவு கொண்ட 60 கேன்களில் மொத்தம் 2,100 லிட்டா் மண்ணெண்ணெய் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. அதையடுத்து மண்ணெண்ணெய்யுடன் வேனை பறிமுதல் செய்தனா்.
வேன் ஓட்டுநா் கேரள மாநிலம் பொழியூா் பகுதியைச் சோ்ந்த வில்சன் (48) என்பவரை கைது செய்தனா்.