முகப்பு
கன்னியாகுமரி

மழை நீடிப்பு: திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல்

குமரி மாவட்டத்தில் மீண்டும் மழை தொடங்கியுள்ள நிலையில் அணைகளுக்கு தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது.

Updated On : 2 அக்டோபர், 2024 at 10:06 PM
திற்பரப்பு அருவியில் புதன்கிழமை சாரல் மழையின்போது உற்சாகமாக குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.
பகிர்:

குமரி மாவட்டத்தில் மீண்டும் மழை தொடங்கியுள்ள நிலையில் அணைகளுக்கு தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இம்மாதம் 3 ஆவது வாரத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடங்கும் என வானிலை அறிவிப்புகள் தெரிவித்துள்ள போதிலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக தொடா் மழை பெய்து வருகிறது. இதில், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் புதன்கிழமை அதிகாலை முதல் இடைவிடாது சாரல் மற்றும் மிதமான மழை பெய்தது. இந்த மழையால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துக் காணப்பட்டது.

இதே போன்று கோதையாறு, பரளியாறு, தாமிரவருணியாறு உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீா் வரத்து அதிகரித்து காணப்பட்டது. செவ்வாய்க்கிழமை காலை 6 மணிமுதல் புதன்கிழமை காலை 6 மணிவரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக முள்ளங்கனாவிளையில் 17.2 மி.மீ. பதிவாகியிருந்தது.

புதன்கிழமை காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 43.43 அடியாகவும், பெருஞ்சாணி அணை-62.55,, சிற்றாறு- 1 அணை- 13.02, சிற்றாறு 2 அணை- 13.12, பொய்கை அணை--14.8, மாம்பழத்துறையாறு அணை- 49.29, முக்கடல் அணை-18.9 அடியாகவும் இருந்தது.

தமிழகத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை மற்றும் காந்தி ஜெயந்தியையொட்டி குமரி மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்களி்ல் புதன்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

குறிப்பாக, திற்பரப்பு அருவிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா்.

திற்பரப்பு அருவிப் பகுதியில் தொடா் சாரல் மழை பெய்து கொண்டிருந்த நிலையில், சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.