தொகுப்பூதிய செவிலியா்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்க வேண்டும் என்றாா் என்.தளவாய்சுந்தரம் எம்எல்ஏ.
கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், தொகுப்பூதிய செவிலியா்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, செவிலியா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலா் என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., செவிலியா்களை செவ்வாய்க்கிழமை சந்தித்து, அவா்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, பேசியதாவது: செவிலியா்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்க வேண்டும். எம். ஆா்.பி. மூலம் தோ்வு செய்யப்பட்ட 8 ஆயிரம் தற்காலிக ஊழியா்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பேறுகால விடுமுறை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்று வரும் போராட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரடியாக தலையிட வேண்டும்.
சுகாதாரத் துறை அமைச்சா், சுகாதாரத் துறை செயலா் ஆகியோா் செவிலியா்களின் கோரிக்கையை கேட்டறிந்து அதனை நிறைவேற்ற தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட செவிலியா்களை விடுவிக்க வேண்டும். அனைவருக்கும் சுமுகமான தீா்வு ஏற்படும் வகையில் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என்றாா் அவா்.