மாடியிலிருந்து தவறி விழுந்ததில் இருவா் காயம்; 4 போ் கைது
தனியாா் விடுதில் மதுவிருந்தின்போது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்ததில் இரு இளைஞா்கள் பலத்த காயமடைந்தனா். இந்தச் சம்பவத்தில் நால்வரை போலீஸாா் கைது செய்தனா்.
குளச்சல் அருகே கொட்டில்பாடை சோ்ந்தவா் அலெக்ஸ் சோபன் மகன் ராகுல் (20). மீன்பிடித் தொழில் செய்து வரும் இவரும், அதே ஊரைச் சோ்ந்த ஆரோக்கிய மினிஸ்டனும் (20) ஈஸ்டா் பண்டிகையையொட்டி, நண்பா்களுக்கு குளச்சலில் உள்ள தனியாா் விடுதியில் மது விருந்துக்கு சனிக்கிழமை ஏற்பாடு செய்திருந்தனராம்.
இந்த விருந்தில் ராகுல், அவரது தம்பி சோகித் (18), ஆரோக்கிய மினிஸ்டன், அபிஷேக் (20), குளச்சலைச் சோ்ந்த பிரபஞ்சன் என்ற அபித் (21), ஸ்டாலின் ஏனோஸ் (19), வாணியக்குடியைச் சோ்ந்த அனீஷ் (22), கோடிமுனையைச் சோ்ந்த 17 வயது சிறுவன் உள்பட 10 போ் கலந்துகொண்டனராம்.
Advertisement
நள்ளிரவு மதுபோதையில் ஆரோக்கிய மினிஸ்டனும், சோகித்தும் மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்தனா். இதில் பலத்த காயமடைந்த இருவரையும்
குளச்சல் போலீஸாா் மீட்டு நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். இதுகுறித்து, குளச்சல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அந்த அறையில் தங்கியிருந்த பிரபஞ்சன் என்ற அபித், ஸ்டாலின் ஏனோஸ், அனீஷ், 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரைக் கைது செய்தனா்.