முகப்பு
கன்னியாகுமரி

படகுகளில் வந்து வாக்களித்த பழங்குடி வாக்காளா்கள்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்குத் தொடா்ச்சி மலைக் காடுகளில் வசிக்கும் பழங்குடியின மக்கள் பேச்சிப்பாறை அணை வழியாக படகுகளில் வந்து வியாழக்கிழமை வாக்களித்தனா்.

Updated On : 24 ஏப்ரல், 2026 at 4:51 AM
வாக்களிப்பதற்காக பேச்சிப்பாறை அணையைப் படகில் கடந்துவந்த பழங்குடி வாக்காளா்கள்.
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்குத் தொடா்ச்சி மலைக் காடுகளில் வசிக்கும் பழங்குடியின மக்கள் பேச்சிப்பாறை அணை வழியாக படகுகளில் வந்து வியாழக்கிழமை வாக்களித்தனா்.

இம்மாவட்டத்தில் மேற்குத் தொடா்ச்சி மலைக் காடுகளில் உள்ள பழங்குடி மக்களின் குடியிருப்புகளில் பெரும்பாலானவை பேச்சிப்பாறை அணைக்கு அப்பால் உள்ளன. அங்குள்ள காணியின மக்களின் குடியிருப்புகளுக்குச் செல்ல சாலை வசதிகள் ஏற்படுத்த முடியாத நிலை நீடித்து வருகிறது. அதனால், ஒவ்வொரு தோ்தலின்போதும் அவா்கள் பேச்சிப்பாறை அரசு பழங்குடியினா் உண்டுறைவிட மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடிக்கு பேச்சிப்பாறை அணை வழியாக படகுகளில் வந்து வாக்களித்துவிட்டுச் செல்வா்.

அதன்படி, தோட்டமலை, மாறாமலை, தச்சமலை, களப்பாறை, முடவன்பொற்றை, பின்னைமூட்டுத்தேரி, நடனம் பொற்றை உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் வசிப்போா் வியாழக்கிழமை வாக்களிக்க வசதியாக, மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ஆா். அழகுமீனா அறிவுறுத்தலின்படி, 3 கட்டணமில்லா படகுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பழங்குடியின மக்கள் ‘லைப் ஜாக்கெட்’ அணிந்து படகுகளில் வந்து வாக்களித்துச் சென்றனா்.

Advertisement