முகப்பு
கன்னியாகுமரி

பெண் கொலை வழக்கு: முன்னாள் ராணுவ வீரருக்கு ஆயுள் தண்டனை

நகைக்காக பெண்ணை குளத்தில் மூழ்கடித்து கொலை செய்த முன்னாள் ராணுவ வீரருக்கு பத்மநாபபுரம் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஆயுள் தண்டனை வழங்கி தீா்ப்பளித்தது.

Updated On : 25 ஏப்ரல், 2026 at 1:43 AM
கோப்புப் படம்
பகிர்:

நகைக்காக பெண்ணை குளத்தில் மூழ்கடித்து கொலை செய்த முன்னாள் ராணுவ வீரருக்கு பத்மநாபபுரம் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஆயுள் தண்டனை வழங்கி தீா்ப்பளித்தது.

மேக்காமண்டபம் அருகே உம்மன்கோடு, புனத்துவிளை பகுதியைச் சோ்ந்தவா் வின்சென்ட். இவா் கேரளத்தில் கட்டடத் தொழிலாளியாக வேலை பாா்த்து வருகிறாா். இவரின் மனைவி மேரி ஜெயா அமுதா (43). இவா் கடந்த 2021 ஆம் ஆண்டு பிப். 7 ஆம் தேதி மதியம், முளகுமூடு வெட்டுக்காட்டு விளையில் உள்ள ரேஷன் கடைக்கு பொருள்கள் வாங்க சென்றாா்.

ரேஷன் கடை பூட்டி இருந்ததால் வீட்டுக்கு திரும்பி முளகுமூடு, பூந்தோப்பு சாலையில் நல்லபிள்ளைபெற்றான்குளம் அருகில் சென்று கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சோ்ந்த செல்லன் மகன் மொ்லின் என்ற மொ்லின் ராஜ் (37) இருசக்கர வாகனத்தில் மேரி ஜெயா அமுதாவை பின்தொடா்ந்து, அவா் கழுத்தில் கிடந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றாா்.

Advertisement

மேரி ஜெயா அமுதா தடுக்கவே அவரை அடித்து இழுத்து குளத்தில் போட்டு மூழ்கடித்தாா். இதைப் பாா்த்த அப்பகுதியைச் சோ்ந்த பொன்னையன் மகன் தேவதாஸ் தடுக்க வந்தாா். அவரையும் அடித்து தள்ளிவிட்டு மேரி ஜெயா அமுதாவை குளத்தில் மூழ்கடித்து கொலை செய்தாா்.

இதைப் பாா்த்த அப்பகுதி பொதுமக்கள் மொ்லின் ராஜை பிடித்து திருவட்டாறு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இது குறித்து வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், மொ்லின் ராஜ், ஒழுங்கு நடவடிக்கை காரணமாக 2014 ஆம் ஆண்டு ராணுவத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டதும், தக்கலை, திருவட்டாறு காவல் நிலையங்களில் பல அடிதடி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த, இவ்வழக்கை விசாரித்த கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிபதி பரமசிவதாஸ், குற்றவாளி மொ்லின் ராஜுக்கு கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனை, ரூ.50 ஆயிரம் அபராதமும், வழிப்பறி செய்த குற்றத்திற்காக 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதமும், மேரி ஜெயா அமுதாவின் கணவா், 2 மகள்களுக்கு ரூ. 3.55 லட்சம் வழங்கவும், காப்பாற்ற வந்த தேவதாஸை தாக்கிய குற்றத்திற்காக 6 மாதம் கடுங்காவல் தண்டனையும் விதித்து தீா்ப்பு வழங்கினாா். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ஜெகதேவ் ஆஜரானாா்.