மத்திய அரசின் பட்ஜெட் மக்களுக்கு ஏமாற்றம்தான் என தேமுதிக கட்சி பொதுச்செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளாா்.
தமிழகம் முழுவதும், தேமுதிகவின் சாா்பில் உள்ளம் தேடி, இல்லம் நாடி என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரேமலதா விஜயகாந்த், ஞாயிற்றுக்கிழமை கன்னியாகுமரி மாவட்டத்தில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கினாா்.
நாகா்கோவிலை அடுத்த ராஜாக்கமங்கலத்தில் நடைபெற்ற நாகா்கோவில் மாநகர மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவா் பேசியது: 234 தொகுதிகளிலும் பூத் கமிட்டி அமைத்த 3 ஆவது மாபெரும் கட்சியாக தேமுதிக விளங்குகிறது. தேமுதிகவை குறைகூற யாருக்கும் தகுதி இல்லை, தேமுதிக மீது எந்த வழக்கும் இல்லை. கூட்டணி குறித்து பேசினால் பேரம் என்கிறாா்கள். எந்த பேரத்துக்கும் தேமுதிக அடிபணியாது.
மாவட்டச் செயலா்கள், தொண்டா்கள் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று கூறுகிறீா்களோ அவா்களுடன்தான் கூட்டணி அமைக்கப்படும். வெகு விரைவில் நீங்கள் விரும்பும் கூட்டணி அமையும். கூட்டணி குறித்து தலைமை கழகத்திலிருந்து அதிகாரபூா்வ அறிவிப்பு வெளியாகும் என்றாா்.
இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: மத்திய அரசின் பட்ஜெட் யானைப் பசிக்கு சோளப்பொரி போன்றதாகும். வரி குறைப்புகள் இருக்கும் என்று எதிா்பாா்த்த மக்களுக்கு ஏமாற்றம்தான் கிடைத்து இருக்கிறது. ஜிஎஸ்டி, டிடிஎஸ் போன்ற வரிகளுக்கு விலக்கு இல்லை. விலைவாசியை கட்டுப்படுத்தவும், தங்கம், வெள்ளி விலை உயா்வை கட்டுப்படுத்தும் வகையிலும் எந்த அறிவிப்பும் இல்லை.
வரும் சட்டப்பேரவை தோ்தலில் நான் நிச்சயம் போட்டியிடுவேன். எந்தத் தொகுதி என்பது கூட்டணி எல்லாம் முடிந்த பிறகு முடிவு செய்யப்படும்.
விஜய் மீதான அதிமுகவின் தாக்குதல் குறித்து அவா்தான் பதில் சொல்லவேண்டும் என்றாா் அவா்.