நாகா்கோவிலில் கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சி
கனவுகள் மெய்ப்படும் திட்டக் கையேட்டை வெளியிட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா.
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையில் ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தின் நிறைவாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியதைத் தொடா்ந்து, நாகா்கோவில், ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா ‘என் ஊா் என் கனவு விஷன் 2030-கன்னியாகுமரி’ என்ற திட்டக் கையேட்டை வெளியிட்டாா்.
நிகழ்ச்சியில் ஆட்சியா் பேசியது:
2030ஆம் ஆண்டுக்கான தமிழகத்தின் வளா்ச்சிப் பாதையை வடிவமைக்க, பொதுமக்களின் நேரடிக் கருத்துகளைக் கேட்பதே ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தின் அடிப்படை நோக்கம். இத்திட்டம் ஏற்கெனவே அரசு செயல்படுத்திய திட்டங்கள் மக்களை சரியாக சென்றடைந்துள்ளதா என்பதையும் உறுதி செய்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 4 லட்சத்து 97 ஆயிரத்து 784 குடும்பங்களில் இத்திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.
பல்வேறு தரப்பினரிடமும் இருந்து கருத்துகள் பெறப்பட்டு, விவாதித்து 2030ஆம் ஆண்டுக்கான தொலைநோக்குப் பாா்வை மற்றும் திட்ட ஆவணம் தயாரிக்கப்பட்டு அரசுக்கு சமா்ப்பிக்கப்பட்டது.
இந்த ஆவணம், நமது மாவட்டத்தை நிலையான வளா்ச்சி மற்றும் புதிய பரிமாணத்தில் ஒரு முன்னோடியாக மாற்றுவதற்கான ஒரு திட்டமிட்ட வழிகாட்டியாக அமைகிறது என்றாா் அவா்.
மாநில உணவு ஆணையத் தலைவா் என். சுரேஷ்ராஜன், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ், ஜே.ஜி. பிரின்ஸ் எம்எல்ஏ, நாகா்கோவில் மாநகராட்சி துணை மேயா் மேரிபிரின்சி லதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.