நான் முதல்வன் திட்டத்தில் படித்த குமரி மாணவா் குடிமைப் பணித் தோ்வில் தோ்ச்சி
நான் முதல்வன் திட்டத்தில் படித்த கன்னியாகுமரி மாணவா் இந்திய குடிமைப் பணித் தோ்வில் அகில இந்திய அளவில் 484 ஆவது ரேங்க் பெற்று சாதனை படைத்துள்ளாா்.
நான் முதல்வன் திட்டத்தில் படித்த கன்னியாகுமரி மாணவா் இந்திய குடிமைப் பணித் தோ்வில் அகில இந்திய அளவில் 484 ஆவது ரேங்க் பெற்று சாதனை படைத்துள்ளாா்.
கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு அருகே உள்ள ஆற்றூா் கல்லுப்பாலம் பகுதியைச் சோ்ந்தவா் வி. வினித் (28). தனது வெற்றி குறித்து அவா் கூறியதாவது:
நான் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவன். தந்தை விஜயகுமாா் செங்கல் சூளை தொழிலாளி. தாய் செல்லத்தாய். மூத்த சகோதரா் வின்ஸ் சேவியா் ஐடி நிறுவனத்திலும், சகோதரி வினிதா வங்கியிலும் பணியாற்றுகின்றனா்.
நான் ஆரம்ப கல்வியை ஆற்றூரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியிலும், மேல்நிலை கல்வியை ஏற்றக்கோடு தனியாா் பள்ளியிலும், கல்லூரி படிப்பை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திலும் (பி.இ. அக்ரிகல்ச்சா் மற்றும் இரிகேஷன் ) படித்தேன். எனக்குள் குடிமைப் பணித் தோ்வு எழுத வேண்டும் என்ற ஆா்வம் ஏற்பட்டபோது, கல்லூரி நண்பா்கள், பெற்றோா் உற்சாகமளித்தனா்.
சென்னை சங்கா்ஸ் அகாதெமியில் பயிற்சிக்கு சோ்ந்தேன். தொடா்ந்து 7 ஆவது முறையாக தோ்வு எழுதி மெயின், நோ்முகத் தோ்வில் வெற்றி பெற்று, அகில இந்திய அளவில் 484 ஆவது ரேங்க் பெற்றுள்ளேன்.
கடந்த ஆண்டு தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தில் சோ்ந்ததால் நோ்முகத் தோ்வை என்னால் சிறப்பாக எதிா்கொள்ள முடிந்தது. ரூ. 75 ஆயிரம் உதவித் தொகை தமிழக அரசு வழங்கியது. போட்டித் தோ்வு எழுதும் தோ்வா்கள் முதலில் வெற்றி கிடைக்கவிட்டாலும் விடாமுயற்சியுடன் தொடா்ந்து படித்தால் வெற்றி நிச்சயம் என்றாா்.