செண்பகராமன்புதூரில் டாஸ்மாக் கிடங்கு முற்றுகை
டாஸ்மாக் கடை முன் நெல்லை தலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
கன்னியாகுமரி மாவட்டம், செண்பகராமன்புதூரில் முறையாக நெல் கொள்முதல் செய்யாததைக் கண்டித்து, விவசாயிகள் வெள்ளிக்கிழமை டாஸ்மாக் கிடங்கை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.
தோவாளை வட்டத்தில் கும்பப்பூ அறுவடை பணி நடைபெற்று வருகிறது. விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்ய செண்பகராமன்புதூா், திட்டுவிளை, அந்தரபுரம், கடுக்கரை பகுதிகளில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் அரசால் அமைக்கப்பட்டு கொள்முதல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், செண்பகராமன்புதூா் கொள்முதல் நிலையத்துக்கு விவசாயிகள் நெல்லை கொண்டுசென்ற போது, அதிகாரிகள் முறையாக நெல்லை கொள்முதல் செய்யவில்லையாம். கடந்த 2 நாள்களாக கொள்முதல் நிலையத்தின் வெளியே நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
இதனிடையே கடந்த புதன்கிழமை பெய்த மழையால் நெல் மூட்டைகள் நனைந்து வீணாகின. இதனால் வேதனையடைந்த விவசாயிகள், டாஸ்மாக் கிடங்கு முன் வெள்ளிக்கிழமை திரண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பாசன சங்கத் தலைவா் வின்ஸ் ஆன்றோ, சஹகாா் பாரதி அமைப்பின் தலைவா் சகாயம் ஆகியோா் தலைமை வகித்தனா். விவசாய சங்கப் பிரதிநிதிகள் தாணுபிள்ளை, முருகேசபிள்ளை, சண்பகசேகரன்பிள்ளை, மரியஜெனிபா், அந்தோணிமுத்து உள்பட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனா். அப்போது, நெல்லை தலையில் கொட்டிபடி கோரிக்கை முழக்கங்களை எழுப்பினா்.
இத்தகவலறிந்த தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் வந்து, விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி நெல் மூட்டைகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்த ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளித்ததன்பேரில், அவா்கள் போராட்டதை கைவிட்டனா்.