முகப்பு
தென்காசி

பாசனத்திற்காக 10 ஆண்டுகளுக்குப் பிறகு கடனாநதி, ராமநதி அணைகள் திறப்பு

பாசனத்திற்காக 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூனில் கடனாநதி, ராமநதி அணைகள் திறக்கப்பட்டன. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:24 AM
கடனாநதி அணையிலிருந்து கார் சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிடுகிறார் நாடாளுமன்ற உறுப்பினர் சா.ஞானதிரவியம். உடன் மாவட்ட ஆட்சியர் சமீரன், செயற்பொறியாளர் மாரியப்பன் உள்ளிட்டோர்.
பகிர்:

பாசனத்திற்காக 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூனில் கடனாநதி, ராமநதி அணைகள் திறக்கப்பட்டன. 

தென்காசி மாவட்டத்திலுள்ள பிரதான அணைகள் கடனாநதி மற்றும் ராமநதி அணைகளாகும். இந்த அணைகளிலிருந்து கார்சாகுபடிக்காக வழக்கமாக ஜூன் மாதத்தில் தண்ணீர் திறந்துவிடப்படும். கடந்த பத்து ஆண்டுகளாக போதிய நீரிருப்பு இல்லாத காரணத்தால் ஜூன் மாதத்தில் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. இந்நிலையில் நிகழாண்டு போதிய நீர் இருப்பு உள்ளதையடுத்து திங்கள்கிழமை கார்சாகுபடிக்குத் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. திங்கள்கிழமை கடனாநதி மற்றும் ராமநதி அணைகளில் இருந்து திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் சா.ஞானதிரவியம் தண்ணீர் திறந்து வைத்தார். தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் முன்னிலை வகித்தார். 

நிகழ்ச்சியில் சிற்றாறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் எஸ்.மாரியப்பன், உதவி செயற்பொறியாளர் எஸ்.சங்கர்ராஜ், உதவிப் பொறியாளர்கள் எல்.கணபதி, கிருஷ்ணமூர்த்தி, முருகேசன், பேட்டர்சன் குழந்தைராஜ், ஆனந்த், கடையம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகையா, மாணிக்கவாசகம், மின்வாரிய உதவிப் பொறியாளர் விஜயராஜ், தென்காசி மாவட்ட திமுக பொறுப்பாளர் சிவபத்மநாபன், மாவட்ட மகளிரணி செல்வி சங்குகிருஷ்ணன், மாவட்ட விவசாய அணி ரவிச்சந்திரன், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் ஜெயக்குமார், கடையம் ஒன்றியச் செயலர் குமார், துணைச் செயலர் தமிழ்ச்செல்வன், நகரச் செயலர்கள் ஆழ்வார்குறிச்சி பொன்ஸ், விக்கிரமசிங்கபுரம் கணேசன், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கண்ணன், குணசேகரன், ஹரிராம்சேட், ஜோசப், வேல், ராமச்சந்திரன், சட்டநாதன், ராமகிருஷ்ணன், சைலப்பன், சுப்பையா, சமுத்திரம், சுப்பிரமணியன், கணபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கடனாநதி அணை மூலம் தர்மபுரம் மடம், சிவசைலம், ஆழ்வார்குறிச்சி, மேல ஆம்பூர், கீழாம்பூர், மன்னார்கோவில், அயன் திருவாலீஸ்வரம், பிரம்மதேசம், பள்ளகால், புதுக்குடி, பனஞ்சாடி, ரெங்கசமுத்திரம் உள்ளிட்ட கிராமங்களில் அரசபத்து, ஆழ்வார்குறிச்சி, ஆம்பூர் பெருங்கால், மஞ்சப்புளி, காக்கநல்லூர், காங்கேயன், வடகுருவைபத்து ஆகிய கால்வாய்களின் மூலம் நேரடி பாசனத்தில் 3987.57 ஏக்கர் விவசாய நிலங்களும் 82 குளங்களின் மூலம் மறைமுகமாக 5935.65 ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறும். ராமநதி அணை மூலம் கடையம், மேலக்கடையம், கோவிந்தப்பேரி, ஆழ்வார்குறிச்சி, வாகைக்குளம், இடைகால், பொட்டல்புதூர், துப்பாக்குடி, அயன்பொட்டல்புதூர், பாப்பான்குளம், ரவணசமுத்திரம் உள்ளிட்ட கிராமங்களில் வடகால், தென்கால் மற்றும் பாப்பான்கால்வாய்கள் மூலம் 1008.19 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.