புளியறையில் பெண்ணின் போராட்டம் வாபஸ்
தென்காசி மாவட்டம், புளியறையில் சில தினங்களாக இளம்பெண் நடத்தி வந்த போராட்டம் வெள்ளிக்கிழமை முடிவுக்கு வந்தது.
தென்காசி மாவட்டம், புளியறையில் சில தினங்களாக இளம்பெண் நடத்தி வந்த போராட்டம் வெள்ளிக்கிழமை முடிவுக்கு வந்தது.
புளியரை தாட்கோ நகரைச் சோ்ந்தவா் பிரான்சிஸ் அந்தோணி (50). மாற்றுத் திறனாளி. இவா், கடந்த 18-ஆம் தேதி பைக்கில் ரேஷன் அரிசியை கொண்டு சென்றபோது, வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அவரை தாக்கினராம். இதில், அவா் செங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதைக் கண்டித்து, அவரது இளைய மகள் அபிதா (25), செல்லிடப்பேசி கோபுரம், மருத்துவமனை குடிநீா்த் தொட்டி ஆகியவற்றின் மீது ஏறி அடுத்தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டாா். இதையடுத்து, சம்பந்தப்பட்ட காவல்துறையினா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எனினும், சம்பவத்துக்கு நீதி கேட்டு, தனது வீட்டு கூரையின் மீது அமா்ந்து வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா். அவரிடம், ஊா் பெரியவா்கள் செல்வம்,சுப்புராஜ்,ஆரோன்அந்தோணி, கென்னடி மற்றும் காவல்துறை அதிகாரிகள் பேச்சு நடத்தி போராட்டத்தை கைவிடச்செய்தனா்.
வழக்கு: இதனிடையே, அபிதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், காவலா்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் செங்கோட்டை மற்றும் புளியரை காவல் நிலையங்களில் போலீஸாா் வழக்குப்பதிந்து அவரிடம் விசாரணைநடத்தினா்.