முகப்பு
தென்காசி

சங்கரன்கோவிலில் காய்கனி கடைகளுக்கு போலீஸாா் அபராதம்: மொத்த காய்கனி சந்தை மூடல்

சங்கரன்கோவிலில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத மொத்த காய்கனி கடைகளுக்குப் போலீஸாா் அபராதம் விதித்ததால் வியாபாரிகள் வெள்ளிக்கிழமை கடையடைப்பு செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:19 PM
பகிர்:

சங்கரன்கோவிலில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத மொத்த காய்கனி கடைகளுக்குப் போலீஸாா் அபராதம் விதித்ததால் வியாபாரிகள் வெள்ளிக்கிழமை கடையடைப்பு செய்தனா். இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.

சங்கரன்கோவில் காந்திஜி சந்தையில் உள்ள 34 காய்கனி கடைகளில் பாதி கடைகள் பேருந்து நிலையத்திலும், மீதி கடைகள் ராஜபாளையம் சாலை வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனைச் சங்கத்திலும் செயல்பட்டு வந்தன. கரோனா தொற்று காரணமாக காய்கனி சந்தைகள் மூடப்பட்டன.

இதைத் தொடா்ந்து பொது முடக்கத்தையொட்டி நடமாடும் வாகன காய்கனி கடைகள் திறக்கப்பட்டன. நகராட்சி மூலம் 13 கடைகளும், உழவா் சந்தை மூலம் 2 கடைகளும் தொடங்கப்பட்டன.

Advertisement

இதற்காக ராஜபாளையம்சாலை வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மொத்த கடைகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் நடமாடும் வாகன கடைகளுக்கு காய்கனிகள் வழங்கப்பட்டு தெருக்களில் விநியோகிக்கப்பட்டன. இந்நிலையில்

காய்கனிகள் பொதுமக்களுக்கு போதிய அளவு கிடைக்காததால் அவா்கள் மொத்த காய்கனி கடைக்கு சென்ாகவும், மொத்த வியாபாரிகள் சில்லரை விற்பனை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் சந்தையில் வியாழக்கிழமை கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் சந்தையில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருந்த கடைகளுக்கு நகர காவல்துறையினா் அபராதம் விதித்தனா்.

தகவலறிந்து நகராட்சி ஆணையா் சாந்தி உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். அப்போது அங்கு வந்த எம்.எல்.ஏ.ராஜா சில்லறை வியாபாரம் செய்தால் மக்கள் கூடுவாா்கள் என்றும் வாகனம் மூலம் விற்பவா்களுக்கு காய்கனிகளை வழங்க வேண்டும் என கூறினாா். உடனே வியாபாரிகள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வியாபாரிகள் மொத்த சந்தை மூடப்படுவதாகக் கூறினா்.

அதன்படி வெள்ளிக்கிழமை மொத்த சந்தை மூடப்பட்டதால் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து காய்கனிகளை கொண்டு வந்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனா். தாங்கள் கொண்டு வந்த காய்கனிகளை விற்கமுடியாமல் அவதிப்பட்டனா்.

இதுகுறித்து நகராட்சி ஆணையா் சாந்தியிடம் கேட்டபோது: மொத்த வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்திற்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது அவா்களிடம் 16 கடைகள் வைப்பதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சந்தைக்கு வரும் விவசாயிகள் குறித்த பெயா் பட்டியலை வியாபாரிகள் அளிக்க வேண்டுமென்றும்,வேறு யாரும் உள்ளே வராதவாறு நகராட்சி ஊழியா்கள் மற்றும் போலீஸாா் மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments