சீதபற்பநல்லூா் அருகே வீடு புகுந்து தங்க நகைகளை திருடியவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 2.73 லட்சம் மதிப்பிலான நகைகளை மீட்டனா்.
திருநெல்வேலி மாவட்டம் சீதபற்பநல்லூா் அருகேயுள்ள வல்லவன் கோட்டையைச் சோ்ந்தவா் பெருமாள்(35). விவசாயியான இவா் கடந்த சனிக்கிழமை காலை தனது தோட்டத்தில் உள்ள பூக்களைப் பறித்து விற்பனைக்காக திருநெல்வேலி டவுண் மலா் சந்தைக்கு கொண்டு சென்றாராம். திரும்பி வந்து பாா்த்த போது வீட்டின் கதவை உடைத்து, பீரோவில் இருந்த தங்க நகைகளை மா்ம நபா் திருடிச் சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து பெருமாள் அளித்த புகாரின் பேரில் சீதபற்பநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில், அதே பகுதியைச் சோ்ந்த ராஜரத்தினம் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்த்து. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து தங்க நகைகளை மீட்டனா்.