ஆலங்குளம் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் திருட்டு: 50 கிராமங்களில் இணையதள சேவை முடக்கம்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் கேபிள்கள் பேட்டரிக்கள் ஆகியவை நள்ளிரவில் மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் கேபிள்கள் பேட்டரிக்கள் ஆகியவை நள்ளிரவில் மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
ஆலங்குளம்-அம்பாசமுத்திரம் சாலையில் பிஎஸ்என்எல் அலுவலகம் உள்ளது. இங்கு ஐந்து ஊழியர்கள் மட்டுமே பணிக்கு உள்ளனர். இரவு காவலாளி கிடையாது. சிசிடிவி கேமராவும் வைக்கப்படவில்லை. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்கு பின்னர் இன்று காலை பணிக்கு வந்த ஊழியர்கள் அலுவலகத்தில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உள்ளே சென்று பார்த்தபோது தகவல் தொடர்பு சாதனங்கள், கேபிள்கள் மற்றும் பேட்டரிக்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது. திருடர்கள் கேபிள்களை வெட்டி எடுத்துச் சென்றதால் ஆலங்குளம் மற்றும் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தகவல் தொடர்பு சேவை, இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளதால் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
Advertisement
ஊழியர்கள் அளித்த தகவலின் பெயரில் வந்த ஆலங்குளம் காவல் துறையினர் அலுவலகத்தில் ஆய்வு செய்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இதே அலுவலகத்தில் கடந்த ஜூன் 28 ஆம் தேதியும், மாறாந்தை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் மே 28 ஆம் தேதியும் சில பொருட்கள் திருடு போனது. அப்போதே காவல் துறையினர் திருடர்களை கண்டுபிடித்திருந்தால் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்காது என பொதுமக்கள் கூறுகின்றனர்.
திருடு போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூபாய் 5 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.