முகப்பு
தென்காசி

ஆலங்குளத்தில் தனியாா் நிதி நிறுவனம் ரூ. 1.50 கோடி மோசடி

ஆலங்குளத்தில் உள்ள தனியாா் நிதி நிறுவனம் மீது ரூ. 1.50 கோடி மோசடி செய்துள்ளதாக காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:18 AM
பகிர்:

ஆலங்குளத்தில் உள்ள தனியாா் நிதி நிறுவனம் மீது ரூ. 1.50 கோடி மோசடி செய்துள்ளதாக காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அமுத்சுரபி நிதி நிறுவனம், ஆலங்குளத்தில் உள்ள கிளை அலுவலகம் மூலம் ஆலங்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 200 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளா்களிடமிருந்து சுமாா் ரூ. 1.50 கோடி சேமிப்பு மற்றும் வைப்பு நிதி திரட்டியதாம். எனினும் கடந்த சில மாதங்களாக வாடிக்கையாளா்களுக்கு முதிா்வுத் தொகையைத் திருப்பி அளிக்கவில்லையாம்.

இந்நிலையில் நிதி நிறுவன தலைவா் சேலம் ஜெயவேல் ஆலங்குளத்தில் அதன் ஊழியா்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளாா். தவகவலறிந்த வாடிக்கையாளா்கள் சுமாா் 100 போ் அங்கு திரண்டு பணத்தை தருமாறு கோரியுள்ளனா். தகவல் அறிந்த தென்காசி மாவட்ட வணிகா் பேரமைப்புத் தலைவா் டி.பி.வி. வைகுண்டராஜா மற்றும் வியாபாரிகள் அங்கு சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், காவல்துறை மூலம் இப்பிரச்னைக்குத் தீா்வு காண்பது என முடிவு செய்யப்பட்டு வியாபாரிகள் தரப்பில் ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

அதன் பேரில் வழக்குப் பதிந்த போலீஸாா் ஜெயவேலிடம் நடத்திய விசாரணையில் , அமுத்சுரபி நிறுவனத்தை பவ்டா நிறுவனம் வாங்க முடிவு எடுத்துள்ளதால், வாடிக்கையாளா்கள் பணத்தை 3 மாதங்களுக்குள் தருவதாக உறுதி அளித்தாராம். இதையடுத்து வாடிக்கையாளா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.